வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி


வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 9 Jun 2021 6:23 PM GMT (Updated: 9 Jun 2021 6:25 PM GMT)

வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீன்மார்க்கெட்

வேலூர் கோட்டை அருகே புதிய மீன் மார்க்கெட் உள்ளது. ஊரடங்கு தளர்வுகளின் காரணமாக கடந்த 7-ந் தேதி மார்க்கெட் திறக்கப்பட்டது. இங்கு மொத்த வியாபாரம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக சென்று மீன் வாங்க முடியாது. இந்த மீன் மார்க்கெட்டில் காலை 6 மணிக்கு பிறகு மொத்தவியாபாரம் செய்ய வேண்டும் என போலீசார் வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக வேலூரில் இருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவியது.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு அனுமதி வழங்கினால் வேலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மீன்களை எளிதாக சப்ளை செய்ய முடியும். மீன்களை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படாது. மீன்களும் கெட்டுப்போக வாய்ப்பில்லை. எனவே இரவு நேரத்தில் மொத்த மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். ஆனால் காவல்துறையினர் பகலில் தான் மொத்த வியாபாரம் செய்ய வேண்டும் என கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது.

சில்லரை விற்பனை கடைகள்

இதுகுறித்து மீன் மார்க்கெட் சங்க தலைவர் எம்.சி.காலித் மற்றும் வியாபாரிகள் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் இரவில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மொத்த வியாபாரம் செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் அனுமதி வழங்கினார். அதன்படி மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு அதிகாலை 6 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
மீன்மார்க்கெட் அருகே உள்ள லாரி ஷெட்டில் சில்லரை விற்பனை மீன் இறைச்சி கடைகள் இயங்கின. இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்களை வாங்கிச் சென்றனர்.


Next Story