வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் வீரண்ணா. இவரது மனைவி ரஜிதா (வயது 27). இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது, ஒரு குழந்தை உள்ளது. வீரண்ணா சிவில் என்ஜினீயர் ஆவார். திருமணமானதில் இருந்தே மனைவி ரஜிதாவிடம் வரதட்சணை கேட்டு வீரண்ணா கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினமும் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி ரஜிதாவுடன், வீரண்ணா சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த ரஜிதா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் ஸ்டேஷன் பஜார் போலீசார் விரைந்து சென்று ரஜிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கொடுமையால் ரஜிதா தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று ரஜிதாவும் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரண்ணா, அவரது தந்தை சந்திரகாந்த், தாய் லட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story