மாமனார்களுக்கு இடையே நடந்த சண்டையை தடுத்த மருமகனுக்கு வெட்டு


மாமனார்களுக்கு இடையே நடந்த சண்டையை தடுத்த மருமகனுக்கு வெட்டு
x
தினத்தந்தி 9 Jun 2021 9:33 PM GMT (Updated: 9 Jun 2021 9:33 PM GMT)

மாமனார்களுக்கு இடையே நடந்த சண்டையை தடுத்த மருமகன் வெட்டப்பட்டார்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 61). இவருடைய தம்பி ராஜேந்திரன் (58). இருவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் செல்வராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் கடந்த 9-ந் தேதி தேவாமங்கலம் மேலகொல்லையில் உள்ள வயலில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் உள்ள வயலில் வேலை செய்து வந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன்(48) தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த தனது மாமனார்கள் இருவரையும் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பிரபு (29) ஆகியோர் எங்களுக்குள் உள்ள சொத்து தகராறில் தலையிட நீ யார் என்று கேட்டு மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மண்வெட்டியால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் நெற்றியில் காயம் அடைந்த மணிகண்டன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகராறு குறித்து தா.பழூர் போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, ராஜேந்திரன், பிரபு ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story