திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் 2 வருடம் கடுங்காவல் - கலெக்டர் எச்சரிக்கை


திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் 2 வருடம் கடுங்காவல் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2021 12:36 PM GMT (Updated: 10 Jun 2021 12:36 PM GMT)

குழந்தை திருமணம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்,

குழந்தை திருமணம் செய்வது 2006 சட்டப்படி குற்றமாகும். 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் செய்யும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும் குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம், ஆகிய அபாயங்கள் உள்ளன.

அதனால் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடை செய்து அவர்களை கல்வியில் மேம்படுத்த பெற்றோர்கள் ஊக்குவித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாமல் குழந்தை திருமணம் நடத்தியவர்கள் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மற்றும் குழந்தை திருமணங்களில் கலந்து கொண்டவர்கள் குற்றவாளிகள் ஆவர்.

இந்த குற்றம் புரிந்தவர்களில் பெண் குழந்தையை திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கு அதிகபட்சமாக இரண்டு வருடம் கடும் சிறை தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போர்க்கு 2 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எனவே களப் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ‘சைல்டு லைன்’ அழைப்பு எண்1098-ல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி தகவல்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story