காய்கறிகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் கவலை


காய்கறிகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 10 Jun 2021 1:49 PM GMT (Updated: 10 Jun 2021 1:49 PM GMT)

திண்டுக்கல் பஸ்நிலைய சந்தையில் காய்கறிகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா அருகே உள்ள காந்தி மார்க்கெட் கடந்த ஆண்டு, ஊரடங்கின் போது மூடப்பட்டது. அதையடுத்து அங்கு புதிதாக கடைகள் கட்டப்பட்டன. 

ஆனால் இதுவரை அந்த கடைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் காய்கறி மொத்த வியாபாரிகள் முருகபவனம் பகுதியில் தற்காலிக சந்தை அமைத்தனர். 

இதேபோல் சில்லரை வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இதற்கிடையே கடந்த மாதம் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் சில்லரை கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் சாலையோரத்தில் கடைகள் அமைத்து காய்கறி விற்பனை நடந்தது. ஆனால் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காததால், வியாபாரிகள் கடைகள் அமைக்க இடம்கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை கடந்த 8-ந்தேதி முற்றுகையிட்டனர். 

அதன் பின்னர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. 

பஸ் நிலைய நடைமேடையில் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை குவியல் குவியலாக வைத்து விற்பனை செய்தனர். ஆனால் காய்கறிகளை வாங்குவதற்கு ஒரு சிலரே நேற்று பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

 இதனால் பெரும்பாலான வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Next Story