கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் - வேளாண் இயக்குனர் பேட்டி


கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் - வேளாண் இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2021 2:27 PM GMT (Updated: 10 Jun 2021 2:27 PM GMT)

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மயிலாடுதுறையில் வேளாண் இயக்குனர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் முன்னிலை வகித்தார். இதில் தமிழக வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சாகுபடி பரப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்ததை அடுத்து டெல்டா விவசாயிகள் சாகுபடி பணிகளை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். குறுகிய கால நெல் ரகங்களான கோ-51, ஏ.எஸ்.டி-16 போன்ற நெல் ரகங்கள் வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் 3,500 மெட்ரிக் டன் விதை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் இருப்பில் உள்ளது. சாகுபடிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பாஸ்பேட் போன்ற உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. உயிர் உரங்கள், நுண்ணூட்டகலவை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் முன்கூட்டியே நாற்றங்கால் தயார் செய்து நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து விதமான இடுபொருட்களும் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டி.ஏ.பி. உரம் தயாரிக்கும் நிறுவனம் மூலப்பொருட்கள் விலை உயர்வால் உரம் விலையை உயர்த்தியது.

அதற்கு மத்திய அரசு மானியம் கொடுத்து தற்போது பழைய விலை ரூ.1,200-க்கு வாங்கி கொள்ளலாம். தனியார் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் வந்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். .

கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு ரூ.84 கோடியில் ரூ.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை 10 நாட்களில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு புெரவி, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ.1,715 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்தது. அதில் 1,586 கோடி விவசாயிகளுக்கு (93 சதவீதம்)் வழங்கப்பட்டு விட்டது. ஒருசில விவசாயிகளுக்கு வங்கி கணக்கு தவறாக இருப்பதாக பணம் திரும்பவந்து விட்டது. விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கை கொடுத்தால் விடுபட்டவர்களுக்கு உடன் வழங்கப்படும்.

வேளாண் இடுபொருட்கள் விதை, நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. எந்திரங்கள் வாங்க ஆன்லைனில் உழவன் ஆப் மூலம் பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாக அலுவலர்கள் நியமிக்க அரசுக்கு அனுமதி கேட்டுள்ளோம். அதுவரை நாகையில் இருப்பவர்கள் தான் கூடுதல் பொறுப்பு வகிப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து வில்லியநல்லூர் கிராமத்தில் தனியார் வயலில் எந்திரம் மூலம் நாற்று நடப்படுவதை வேளாண்மை இயக்குனர் நேரில் பார்வையிட்டார்.

Next Story