கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் பலி 394 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கொரோனா பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 53 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது கடந்த மே மாதம் 6-ந் தேதி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. 21-ந் தேதி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 864 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் கடந்த 1-ந் தேதி 20 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். அதன்பிறகு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
394 பேருக்கு தொற்று
அந்த வகையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 394 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 343 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த 54 வயது நபர் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 80 வயது முதியவர், புவனகிரியை சேர்ந்த 65 வயது பெண், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 60 வயது முதியவர், குமராட்சியை சேர்ந்த 35 வயது வாலிபர் மற்றும் 76 வயது முதியவர் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
519 பேர் வீடு திரும்பினர்
இதுதவிர கம்மாபுரத்தை சேர்ந்த 55 வயது நபர் மற்றும் 60 வயது முதியவர், கடலூரை சேர்ந்த 84 வயது மூதாட்டி மற்றும் 63 வயது பெண் ஆகியோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 55 வயது நபர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 40 வயது நபர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 58 வயது நபர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 615-ல் இருந்து 628 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 519 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Related Tags :
Next Story