மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்


மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:04 PM GMT (Updated: 10 Jun 2021 8:04 PM GMT)

மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தொற்று குறைவான மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடை, இறைச்சிக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சலூன் கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட சில கடைகளை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 இந்தநிலையில் புதுக்கோட்டையின் பகுதியான கீழ ராஜவீதியல் பல்வேறு ஜவுளி கடைகளில் முன்கதவு பூட்டப்பட்ட நிலையில் மறைமுகமாக மாற்று வழியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் கீழ ராஜ வீதிக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் கூட்டமாக சென்ற மக்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
 பின்னர் அங்கு மறைமுகமாக செயல்பட்ட ஜவுளிக் கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பெரிய ஜவுளி கடைகளின் உள்ளே சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் கூடியிருந்தனர். அதனைத்தொடர்ந்து கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு கடையை மூடி பூட்டினர். பின்னர், ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைகள் உள்பட 8 கடைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.  மறு உத்தரவு வரும்வரை கடையை திறந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால், கீழ ராஜவீதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story