மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு: மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு: மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:29 PM GMT (Updated: 10 Jun 2021 9:29 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நாளை தண்ணீரை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். அணையில் தண்ணீர் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நாளை தண்ணீரை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். அணையில் தண்ணீர் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முதல்-அமைச்சர் வருகை
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இருப்பதால் நாளை (சனிக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நாளை காலை 10.30 மணி அளவில் மேட்டூர் அணையில் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சேலம் வருகிறார். 
வரவேற்பு
சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் முதல்-அமைச்சரை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வரவேற்்கின்றனர். பின்னர் கார் மூலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவதுடன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 
இதையடுத்து சேலத்தில் இன்று இரவு தங்கும் மு.க.ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேட்டூருக்கு சென்று அங்கு அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர் அணையில் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் அவர் செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story