பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 12:15 PM GMT (Updated: 11 Jun 2021 12:15 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அபிராமி அம்மன் சன்னதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகர செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிமுன்அன்சாரி முன்னிலை வகித்தார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சமூக இடைவெளியுடன் பலர் கலந்து கொண்டனர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்விற்கு காரணமான மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது. மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மூன்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் நகர துணைத்தலைவர் அப்துல்ஹமீது நன்றி கூறினார்.

இதேபோல நாகையை அடுத்த நாகூரில் தர்கா அலங்கார வாசலில் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகூர் நகர செயலாளர் தவுபிக் மாலூமியார் தலைமை தாங்கினார். நகர துணை தலைவர் ரபீக் முன்னிலை வகித்தார். இதில் தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதுரு சாகிப் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திட்டச்சேரி பஸ்நிலையம் எதிரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திட்டச்சேரி நகர தலைவர் முர்த்தலா தலைமை தாங்கினார். .இதில் மாவட்ட செயலாளர் அபுஹாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல் திட்டச்சேரி தபால் நிலையம் எதிரிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story