ஒரே நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு டோக்கன் வினியோகம்


ஒரே நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 Jun 2021 3:29 PM GMT (Updated: 11 Jun 2021 3:29 PM GMT)

14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி: 


14 வகை மளிகை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த 3-ந்தேதியன்று கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2-வது தவணை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி முதல் இந்த 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

 நிவாரண பொருட்களில் கோதுமை மாவு ஒரு கிலோ, ரவை ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுந்தம் பருப்பு அரை கிலோ, புளி 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், சீரகம், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா 100 கிராம், டீ தூள் 2 (100 கிராம்), குளியல் சோப்பு 1 (125 கிராம்) துணி சோப்பு 1 (250 கிராம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

டோக்கன் வினியோகம்
தேனி மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 568 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த நிவாரண தொகுப்பு மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. 526 ரேஷன் கடைகள் மூலம் இவை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிவாரண தொகுப்பு மற்றும் நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கன் வினியோகம் செய்யும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

அதுபோல், இந்த நிவாரண பொருட்கள் தேனி மாவட்டத்தில் உள்ள 5 உணவுப் பொருள் பாதுகாப்பு கிட்டங்களுக்கு கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டன.

 கூட்டுறவு சங்கங்களில் இந்த மளிகை பொருட்களை அரசு வழங்கியுள்ள துணிப் பைகளில் தொகுப்புகளாக தயார் செய்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. 

உணவுப் பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் இருந்து மளிகை பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Next Story