குஜிலியம்பாறை அருகே சுண்ணாம்புக்கல் வெட்டி கடத்தல்; பொக்லைன், எந்திரம் லாரி பறிமுதல்


குஜிலியம்பாறை அருகே சுண்ணாம்புக்கல் வெட்டி கடத்தல்; பொக்லைன், எந்திரம் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2021 3:59 PM GMT (Updated: 11 Jun 2021 3:59 PM GMT)

குஜிலியம்பாறை அருகே சுண்ணாம்புக்கல் வெட்டி கடத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் ஜேசுராஜ் ஆகியோர் ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரப்பட்டிக்கு ஆய்வு பணிக்காக நேற்று சென்றனர். அப்போது எதிரே டிப்பர் லாரி ஒன்றும், அதற்கு பின்னால் பொக்லைன் எந்திரமும் வந்தது. உடனே அதிகாரிகள் அந்த லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் மறித்தனர். ஆனால் அவற்றில் வந்த டிரைவர்கள், லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி 10 டன் சுண்ணாம்புக்கல்லை கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து மாவட்ட கனிம நிர்வாக இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கம்) சசிகுமார் மற்றும் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சுண்ணாம்புக்கல்லை கடத்திய டிப்பர் லாரி மற்றும் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story