சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் 6 பேர் கைது


சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 4:13 PM GMT (Updated: 11 Jun 2021 4:13 PM GMT)

சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பைனான்சியர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் மார்ட்டின் (வயது 45). பைனான்சியரான இவர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்றபோது, தைக்கா தெருவில் மறைந்து இருந்த மர்ம கும்பல் திடீரென்று மார்ட்டினை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறு
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் மார்ட்டின் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
6 பேர் கைது
இது தொடர்பாக, சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்த பாபு சுல்தான் (52), அவருடைய மகன்கள் பாரிஸ் (22), பிலால் (19), சிந்தா (55), பீர் முகம்மது மகன் புகாரி (22), அப்துல் சமது (45) ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பஹ்ருதீன், அப்துல்காதர், மொகதும், மைதீன் மீரான், செந்தில் உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான பாபு சுல்தான், சாத்தான்குளம் வர்த்தக சங்க பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story