தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 4:23 PM GMT (Updated: 11 Jun 2021 4:23 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாயர்புரம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயர்புரம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. சாயர்புரம் பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாட்டு வண்டியில் ஏறி நின்ற காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தூத்துக்குடி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று 3-ம் கேட் மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் மாநகரம் முழுவதும் 16 இடங்களில் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பசுவந்தனை
ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் நின்று, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகள் முன்பும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி மெயின் ரோடு பெட்ரோல் பங்க் முன்பாக நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ் தலைமையில், மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ் தலைமையில், கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரசார் பங்கேற்று, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமையில், பாண்டவர் மங்கலம் பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரசார் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் வேல்ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் முருகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தையாபுரம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சகாயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, பேட்மாநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்குள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பெட்ரோல் பங்க் முன்பு ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சித்திரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி ஜெயின் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பும், காயல்பட்டினம் ரத்தினபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆறுமுகநேரி ஜெயின் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கே.கே.சற்குரு, தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் ரத்தினபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஜமால் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் முத்துவாப்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் முகைதீன் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். முக்காணி நகர காங்கிரஸ் சார்பில், அங்குள்ள பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல் விலையை குறைக்க கோரியும், விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடம்பூர்
கடம்பூரில் உள்ள 2 பெட்ரோல் பங்க்குகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தியவாறு, பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெறக் கோரியும், விலை குறைப்பை உடனடியாக அமலுக்கு கொண்டு வர கோரியும், மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஏரல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை கண்டித்து ஏரல் பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story