1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்தது


1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்தது
x
தினத்தந்தி 11 Jun 2021 5:56 PM GMT (Updated: 11 Jun 2021 5:56 PM GMT)

குமரி மாவட்டத்துக்கு 1500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்துள்ளன. அவை நாகர்கோவில், தக்கலையில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 1500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்துள்ளன. அவை நாகர்கோவில், தக்கலையில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
மருந்து தட்டுப்பாடு
கொரோனா 2-வது அலை பரவலின் போது குமரி மாவட்டத்தில் முதல் அலையை விட தொற்று பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 ஆனால் மருந்து தட்டுப்பாடு காரணமாக எல்லோருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி இல்லாததின் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
1500 டோஸ் வந்தன
இந்த நிலையில் தமிழகத்துக்கு நேற்று முன்தினம் முதல் தடுப்பு ஊசி மருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மருந்துகள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 அதன்படி குமரி மாவட்டத்துக்கு 1500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை நேற்றிரவு குமரி மாவட்டம் வந்து சேர்ந்தன. 
நாகர்கோவில்-தக்கலை
அதில் 1200 டோஸ் மருந்துகள் நாகர்கோவில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 300 டோஸ் மருந்துகள் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாகர்கோவில் கோர்ட்டு, டதி பள்ளி, குருசடி ஆர்.சி. சர்ச் வளாகம் உள்ளிட்ட மூன்று சிறப்பு முகாம்களில் இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. அதேபோல தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையிலும் இன்று தடுப்பூசி போடப்படுகிறது.

Next Story