விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 6:00 PM GMT (Updated: 11 Jun 2021 6:00 PM GMT)

நெல்கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதனக்கோட்டை, ஜூன். 12-
நெல்கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
நெல்கொள்முதல் நிலையம்
ஆதனக்கோட்டை அருகே உள்ள கிடாரம்பட்டியில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் கிடாரம்பட்டி, கம்மங்காடு, மணவிடுதி, பெருங்கொண்டான்விடுதி, மாந்தாங்குடி, வடவாளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது, இப்பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இங்குள்ள நெல் கொள்முதல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கிடையில் கிடாரம்பட்டி நெல்கொள்முதல் நிலையம் அனைத்து கிராமங்களுக்கும் மையப் பகுதியில் இருப்பதால் வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு  கிடாரம்பட்டியில் நெல்கொள்முதல் நிலையும் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story