நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை வற்புறுத்த கூடாது மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை


நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை வற்புறுத்த கூடாது மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2021 4:25 AM GMT (Updated: 12 Jun 2021 4:25 AM GMT)

கொரோனா தொற்று பரவும் நெருக்கடியான காலகட்டத்தில் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை வற்புறுத்த கூடாது மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மகளிர் திட்டத்தின் கீழும், அரசு சாரா நிறுவனங்கள் மூலமும் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இம்மகளிர் குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கான தனியார் நிறுவனங்களை நாடி கடன் பெற்றவர்களிடம் மேற்படி கடன் தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களிடமிருந்து கடன் வசூல் செய்யும் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும்.

மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


Next Story