கடலூர் மாவட்டத்திற்கு 12,900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர்


கடலூர் மாவட்டத்திற்கு 12,900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர்
x
தினத்தந்தி 12 Jun 2021 5:07 PM GMT (Updated: 12 Jun 2021 5:07 PM GMT)

கடலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.உள்பட 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டன. பிறகு 2500 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தது. அவை மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி வரவில்லை.

12,900 கோவிஷீல்டு

இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்திற்கு 12 ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. அவற்றை அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையம், தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கும் பிரித்து வைத்து அனுப்பப்பட்டது. அங்கு காலை முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

 முன்னதாக தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் திரண்டதால் முன் கூட்டியே வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப் பட்டது. அதன்படி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கடலூர் அரசு மருத்துவமனையிலும் டோக்கன் வழங்கப்பட்டு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.இதேபோல் கடலூர் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் டோக்கன் முறைப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

2,955 பேர்

நேற்று மட்டும் 2ஆயிரத்து 955 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.1200 கோவாக்சின் இருப்பு உள்ளது. அதை 2- வது தவணையில் உள்ளவர்களுக்கு மட்டும் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

அதில் முதல் தவணையாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 768 பேரும், 2-வது தவணையாக 53 ஆயிரத்து 817 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 748 பேர் கோவிஷீல்டும், 43 ஆயிரத்து 837 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர்.

இதேபோல் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் விருத்தாச்சலத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

இதில்  விருத்தாச்சலம் பாத்திமா பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் பலர் திரண்டு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியல் ஈடுபட்டனர்.

Next Story