செம்பனார்கோவில் அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை 3 பேர் கைது


செம்பனார்கோவில் அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 1:00 PM GMT (Updated: 13 Jun 2021 1:00 PM GMT)

செம்பனார்கோவில் அருகே கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொறையாறு,

செம்பனார்கோவில் அருகே இளையாளூர், நரிக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் செல்வநாதன் (வயது 30), கூலி தொழிலாளியான இவர் கடந்த 10-ந் தேதி நரிக்குடியில் நடந்த அமாவாசை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், ராஜ்கிரண், தீபக் ஆகியோரின் உறவுக்கார பெண் ஒருவர் திருப்பூரில் ஒரு கம்பெனியில் பணிபுரியும் போது வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த தம்பதியினர் குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்கு சம்பவத்தன்று நரிக்குடிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து அமாவாசை கூட்டத்தில் வாக்குவாதம் நடைபெற்றது.

கத்திக்குத்தில் தொழிலாளி பலி

ஊர் கட்டுப்பாட்டை மீறியது தவறு என்று செல்வநாதன் கண்டித்துள்ளார். பெண் வீட்டார் தரப்பில் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஆனால் விடாமல் செல்வநாதன் கேட்டு கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆனந்த், ராஜ்கிரண், தீபக் ஆகியோர் செல்வநாதனை அடித்து உதைத்து கத்தியால் வயிற்றில் குத்தினர்.

இதில் படுகாயமடைந்த செல்வநாதனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வநாதன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆனந்த் (21), ராஜ்கிரண் (30), தீபக் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story