சேமிப்பு கிடங்குகளில் இருந்து 14 வகை நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி


சேமிப்பு கிடங்குகளில் இருந்து 14 வகை நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி
x
தினத்தந்தி 14 Jun 2021 1:03 PM GMT (Updated: 14 Jun 2021 1:03 PM GMT)

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி வழங்கும் விதமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி வழங்கும் விதமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,185 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 430 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகிற 15-ந் தேதி முதல் 2-வது தவணை ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 14 வகையான நிவாரண பொருட்களும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த நிவாரண பொருட்கள் நேற்று லாரிகளில் ஏற்றப்பட்டு, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் 14 வகையான பொருட்களும் துணிப்பைகளில் போடப்பட்டு, நாளை முதல் மக்களிடம் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story