மளிகை வாங்க பெண்கள்; மது வாங்க ஆண்கள்


மளிகை வாங்க பெண்கள்; மது வாங்க ஆண்கள்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:33 PM GMT (Updated: 15 Jun 2021 6:33 PM GMT)

ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் வாங்க பெண்களும், மது வாங்க டாஸ்மாக் கடையில் ஆண்களும் காத்திருந்தனர்.

சிவகங்கை,


கொரோனா ஊரடங்கால் தொழில்கள் நசுங்கி பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு போய் கொண்டு இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 21-ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
தற்போது நேற்று முதல் 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம், 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் டோக்கன் வினியோகிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

ரேஷன்கடையில் பெண்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இல்லாத பெண்கள் தங்கள் குடும்பத்தை நிர்வகிக்க அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், மளிகை பொருட்கள் பெறுவதற்காக கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க ரேஷன் கடை முன்பு நின்றிருந்ததை பார்க்க முடிந்தது.
அதே நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அப்போதும் மதுக்கடைகள் முன்பு மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று 2-வது நாளாக மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடை முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஒருபுறம் வீட்டில் குடும்பத்தில் உள்ளவர்களின் பசியை தீர்க்க பெண்கள் துணிப்பைகளுடன் தங்களுக்கு கொரோனா நிவாரண தொகை கிடைக்குமா? மளிகை பொருட்கள் கிடைக்குமா? என காத்திருந்தனர். மறுபுறம் தாங்கள் விரும்பும் மதுபாட்டில்கள் கிடைக்குமா? என மதுக்கடைகள் முன்பு அலைபாய்ந்த மதுபிரியர்கள் கூட்டம். பாட்டில், பாட்டிலாக மது வாங்கியவர்கள் அதை குடித்து கொண்டு தள்ளாடியபடியே வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே கொரோனா நிவாரண தொகை பெற்று வீடு திரும்பிய பெண்களிடம், அவரது கணவன் தங்களுக்கு மது குடிக்க பணம் கேட்டு சண்டை போட்ட சம்பவங்களும் நேற்று நடந்தேறியது.

மதுக்கடையை மூட வேண்டும்

இது குறித்து சிவகங்கை பகுதி பெண்கள் கூறும் போது, அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதி தருவது வரவேற்கத்தக்கது.
ஆனால் மதுக்கடைகளை திறந்து வைத்து கொண்டு நிவாரண தொகை தருவது அந்த பணத்தை எங்களால் பத்திரப்படுத்த முடியவில்லை. கணவர் அல்லது மகன்கள் மது குடிக்க சண்டை போட்டு பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள். அடுத்த வேளை சோறுக்கு என்ன செய்யலாம் என்று தவித்து வரும் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
சில ஆண்கள் குடும்ப தலைவிகள் நிவாரண தொகை வாங்க செல்லும் முன் ரேஷன்கடைக்கு சென்று கொரோனா நிவாரண தொகையை பெற்றுக்கொண்டு மதுக்கடைக்கு சென்று விடுகிறார்கள். இது போன்ற நிலையை தடுக்க அரசு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story