உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை


உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2021 8:58 PM GMT (Updated: 15 Jun 2021 8:58 PM GMT)

பெரம்பலூர் நகரில் உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியின் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஆட்டோக்களை இயக்க பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்த எண்ணிக்கையின்படி ஆட்டோவில் பயணிகளை டிரைவர்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். டிரைவர்களும் முககவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக ஆட்டோக்களை இயக்க வேண்டும்.
வரிசை எண் ஒட்ட வேண்டும்
மேலும் பெரம்பலூர் நகரில் உரிமம் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் வட்டார போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து போலீசார் மூலம் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்படும். ஆட்டோக்களில் போலீசாரால் வழங்கப்படும் வரிசை எண், அந்தந்த ஆட்டோ நிறுத்தங்கள் பெயர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்க வேண்டும். இனி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் ஆட்டோக்கள் மவுலானா மேல்நிலைப்பள்ளி வழியாக செல்ல வேண்டும். காமராஜர் வளைவில் இருந்து பெரியார் சிலை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடாது, என்றார்.
முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து 12 தீர்மானங்கள் ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பெரம்பலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story