நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும்


நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2021 6:37 PM GMT (Updated: 16 Jun 2021 6:37 PM GMT)

ஆனைக்குட்டம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், 
ஆனைக்குட்டம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
ஆனைக்குட்டம் அணை 
விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம் அணை  பாசன வசதிக்காக பயன்படுவதைவிட விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுவது பிரதானமாக இருந்து வருகிறது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆனைக்குட்டம் அணை அனைத்து நகராட்சி பகுதிக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வந்தது.
ஆனால் இந்த அணையின் ஷட்டர் பழுது காரணமாக அணையில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக விருதுநகர் பகுதியில் மழை அளவு குறைவாக உள்ள நிலையில் மழை பெய்யும் காலத்திலும் அணைகளில் தேக்கி வைக்க முடியாமல் ஷட்டர் வழியாக நீர் கசிந்து விடும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
நீர்க்கசிவு 
பொதுப்பணித்துறையினரும் அவ்வப்போது அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று ஷட்டரை  பழுது பார்ப்பதாக கூறி வந்தாலும் தொடர்ந்து இன்னும் நீர்கசிவு இருந்துதான் வருகிறது.
 ஆனாலும் பொதுப்பணித்துறையினர் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து ஷட்டரை பழுது பார்த்தாலும் அதில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. 
இதுபற்றி ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 
இந்த அணையின் ஷட்டர் அமைப்பானது முறையாக அமைக்கப்படாததால் நீர்க்கசிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
வடிவமைப்பு 
என்னதான் பழுது பார்த்தாலும் நீர்க்கசிவை தடுக்க முடியாது. எனவே முற்றிலுமாக ஷட்டர் அமைப்பின் வடிவமைப்பை மாற்றி புதிதாக ஷட்டர் அமைத்தால்  ் நீர் கசிவை முழுமையாக தடுக்க முடியும்.
 அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்து ஷட்டரை பழுது பார்ப்பதால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. எனவே இவ்வாறு பலமுறை நிதி ஒதுக்கீடு செய்து ஷட்டரை பழுது பார்ப்பதைவிட ஒட்டுமொத்தமாக ஷட்டரை மாற்றி அமைக்க அரசிடம் நிதி உதவி பெற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை புதிதாக வடிவமைத்து மாற்றி அமைத்தால்தான் நீர்க்கசிவைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீர் ஆதாரம் 
ஆனாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து அரசிடம் ஷட்டரை பழுதுபார்க்க நிதி ஒதுக்கீடு பெற்று பழுது பார்த்ததாக கூறி வரும் நிலையில் உரிய பலன் கிடைக்காத நிலையே தொடர்கிறது.
இதனால் அணைகளில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணை படுகையில் தோண்டப்பட்டு உறைகளிலும், நீர் பெருகாத நிலையில் விருதுநகருக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்காதநிலை தொடர்கிறது.
எனவே மாவட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்ட இந்த அணையில் புதிய ஷட்டர் அமைத்து நீர் கசிவை தடுத்து அணையில் நீர் தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story