விழுப்புரத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


விழுப்புரத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 6:52 PM GMT (Updated: 16 Jun 2021 6:52 PM GMT)

14 வகை மளிகை பொருட்களை குறைத்து வழங்கியதை கண்டித்து விழுப்புரத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி கடை விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-ம் தவணை நிதி ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மணி நகரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. 
அப்போது ரூ.2 ஆயிரம் பெற்ற பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பையில் 14 வகை பொருட்களும் இருக்கிறதா? என்று சரிபார்த்தபோது 8 முதல் 10 வகை பொருட்கள் மட்டுமே இருந்தது. சர்க்கரை, உளுத்தம்பருப்பு, டீத்தூள் உள்ளிட்ட 4, 5 பொருட்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

இதுபற்றி அவர்கள், உடனடியாக ரேஷன் கடை விற்பனையாளரிடம் முறையிட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த ரேஷன் கடையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் பொதுமக்களில் ஒரு சிலர், ஆவேசமடைந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அடங்கிய பையை ரேஷன் கடையிலேயே விற்பனையாளர் முன்பு தூக்கி வீசிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு அங்கிருந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

பணியிடை நீக்கம்

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகர் அந்த கடையில் ஆய்வு செய்தார். இதில் பொருட்களை குறைவாக வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ரேஷன் கடை விற்பனையாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story