திருக்கழுக்குன்றத்தில் விபத்தில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற உதவிய திருப்போரூர் எம்.எல்.ஏ.


திருக்கழுக்குன்றத்தில் விபத்தில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற உதவிய திருப்போரூர் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 17 Jun 2021 4:28 AM GMT (Updated: 17 Jun 2021 4:28 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தமங்கலம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் நரேன் குமார் (வயது 17). நேற்று முன்தினம் இவர் திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நரேன் குமார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நரேன் குமார் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி தனது காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்திய அவர் அருகில் நின்றவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து விபத்தில் சிக்கி துடித்து கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ. பாலாஜி அவரை தனது காரில் ஏற்றி முதலுதவி அளிப்பதற்காக திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை அனுப்பி வைத்தார்.

Next Story