கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 Jun 2021 5:27 PM GMT (Updated: 17 Jun 2021 5:27 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 234 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 55 ஆயிரத்து 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 234 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இவர்களில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மங்களூர், கடலூர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 3 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடலூர், கம்மாபுரத்தை சேர்ந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 பேருக்கும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 203 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 937 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 594 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். கொரோனாவுக்கு நேற்று மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-

3 பேர் பலி

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 72 வயது மூதாட்டி கடலூர் அரசு மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர், மருங்கூரை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோர் சென்னை மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பலியானார்கள். இதன்மூலம் நேற்று வரை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 702 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 2179 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 494 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் 140 கட்டுப்பாட்டுப் பகுதியாக குறைந்தது.

Next Story