திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்


திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் ஆத்திரம் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபர்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:02 AM GMT (Updated: 21 Jun 2021 1:02 AM GMT)

திருந்தி வாழும்படி அறிவுரை கூறியதால் நண்பரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் என்ற கார்க் (வயது 25). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தனது உறவினரான ரவுடி மணிகண்டன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.

இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 18-ந் தேதி எட்வின் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

திருந்தி வாழும்படி அறிவுரை

நேற்று முன்தினம் இரவு எட்வின், தனது நண்பர்களான ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த அஜித்குமார் என்ற ரசம் (21), ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி, தினேஷ் ஆகியோருடன் தனது வீட்டில் கஞ்சா மற்றும் மது அருந்தினார்.

அப்போது அஜித்குமார், “குற்றங்களை செய்து சிறைக்கு போவது நல்லா இல்லை. இதனால் திருந்தி வாழ வேண்டும்” என்று எட்வினுக்கு அறிவுரை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த எட்வின், அஜித்குமாரிடம் தகராறு செய்தார். இருவரையும் ரவி, தினேஷ் ஆகியோர் சமரசம் செய்தனர்.

பின்னர் ரவி, தினேஷ் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அஜித்குமாரை தன்னுடன் படுக்குமாறு எட்வின் கூறியதால் அவர் மட்டும் அங்கேயே தங்கினார்.

பூந்தொட்டியை போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று காலை ரவி வீட்டுக்கு சென்ற எட்வின், அஜித்குமாரை கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது திருந்தி வாழும்படி அறிவுரை கூறிய நண்பன் அஜித்குமாரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்து விட்டு எட்வின் தப்பியது தெரியவந்தது. கொலையான அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய எட்வினை தேடி வருகின்றனர்.

Next Story