திருமணமான 29 வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை


திருமணமான 29 வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Jun 2021 5:26 PM GMT (Updated: 21 Jun 2021 5:26 PM GMT)

திருமணமான 29 வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்


கண்டாச்சிமங்கலம்

பட்டதாரி பெண்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் குருநாதன்(வயது 32). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த காளிமுத்து மகள் பட்டதாரியான ஷோபனா(25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23-ந் தேதி வடதொரசலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷோபனா படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் எரிச்சல் தாங்க முடியாமல் அலறினார்.

பரிதாப சாவு

இந்த சத்தம் கேட்டு அவரது கணவர் குருநாதன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஷோபனாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.பின்னர் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஷோபனாவை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கோட்டாட்சியர் விசாரணை

ஷோபனாவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இதுகுறித்து அவரது தந்தை காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் திருமணமாகி 29 நாட்களே ஆவதால் ஷோபனாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 29-வது நாளில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் வடதொரசலூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story