கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் படுகொலை


கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் படுகொலை
x
கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் படுகொலை
தினத்தந்தி 22 Jun 2021 2:55 PM GMT (Updated: 22 Jun 2021 2:55 PM GMT)

கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் படுகொலை

கணபதி

கோவை காந்திமாநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் குமார் என்ற லவேந்திரன் (வயது 49). இலங்கை அகதியான இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி கவிதா (32). 

கவிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு லவேந்திரனை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார். முதல் கணவருக்கு பிறந்த மகனும் கவிதாவுடன்தான் உள்ளார். கவிதா வீட்டின் அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.


இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கவிதா எந்த நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியை லவேந்திரன் கண்டித்தார். ஆனாலும் கவிதா தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு லவேந்திரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கவிதா வீட்டில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

இதை பார்த்த லவேந்திரன் தனது மனைவியை திட்டினார். 
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் கவிதா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனது தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. 


இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்று முன்தினம் இரவு கவிதா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது கணவர் இவ்வளவு நாட்கள் எங்கே சென்றாய்? குழந்தைகள் இருப்பது நினைவில்லையா? என அவரிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த லவேந்திரன் ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து மனைவியின் தலை, கை, கால்களில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதைப்பார்த்த மகன்கள் அதிர்ச்சி அடைந்து அழுதனர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லவேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


போலீசார் வலைவீச்சுஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு பிணமாக கடந்த கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லவேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story