உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற வெடிபொருட்கள் பறிமுதல்


உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற வெடிபொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jun 2021 5:33 PM GMT (Updated: 22 Jun 2021 5:33 PM GMT)

விழுப்புரம் அருகே உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த ஆயந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்ததில் அதற்குள் 200 சிலரிகள், 200 ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

விசாரணையில் அந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடியை சேர்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன் (வயது 31) என்பதும், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா சித்தாமூர் பகுதியில் தங்கியிருந்து கிணறு வெட்டும் தொழில் செய்து வருவதும், தற்போது நாதன்காடுவெட்டியை சேர்ந்த ஒருவரின் இடத்தில் கிணறு வெட்டுவதற்காக சித்தாமூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மேற்கண்ட வெடிபொருட்களை கொண்டு சென்றதும், இந்த வெடிபொருட்களை உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த வெடிபொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story