காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்


காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2021 8:13 PM GMT (Updated: 22 Jun 2021 8:13 PM GMT)

தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தப்பட்டார்.

தாரமங்கலம் அருகே
காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்
தாரமங்கலம், ஜூன்.23-
தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு கிராமம் கூடாரமேடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 21). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்த வெள்ளக்குட்டி என்பவரின் மகள் புவனேஸ்வரி (19). இவர் ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஷ்கண்ணனுக்கும், புவனேஸ்வரிக்கும் காதல் மலர்ந்தது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களை ஒன்றாக அனுப்பி வைத்தனர்.
கடத்தல் 
தொடர்ந்து ராஜேஷ்கண்ணன், புவனேஸ்வரி ஆகியோர் துட்டம்பட்டி ஆயமரம் பகுதியில் உள்ள  உறவினர் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை புவனேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய பெற்றோர் தங்களது உறவினர்களுடன் காரில் வந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த புவனேஸ்வரியை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ்கண்ணன், தனது மனைவி கடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் புதுப்பெண்ணை கடத்தியவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story