திருவள்ளூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தொடர்ந்து ‘அலாரம்' ஒலித்ததால் பரபரப்பு


திருவள்ளூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தொடர்ந்து ‘அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 4:28 AM GMT (Updated: 23 Jun 2021 4:28 AM GMT)

திருவள்ளூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தொடர்ந்து ‘அலாரம்' ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை 6 மணி அளவில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ‘அலாரம்' ஒலித்தது. அப்போது அங்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஏ.டி.எம் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை செய்ததில் ஏ.டி.எம் மையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘அலாரம்' ஒலித்தது தெரியவந்தது. போலீசார் வங்கி ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இவ்வாறாக தொடர்ந்து அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து 4 மணி நேரம் வரை ‘அலாரம்' ஒலித்தது. பின்னர் வங்கி ஊழியர்கள் 9.30 மணி அளவில் வந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக நேற்று வங்கி ஏ.டி.எம் மையம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

Next Story