சென்னை விமான நிலையத்தில் ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.19¾ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.19¾ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jun 2021 6:21 AM GMT (Updated: 23 Jun 2021 6:21 AM GMT)

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.19¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முதியவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜெய்னுலாப்தீன் (வயது 60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் சந்தேகத்தின் பேரில் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று ஆடையை சோதனை செய்த போது, பேண்ட்டில் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவரிடமிருந்து ரூ.19 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story