கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கோம்பூரில் பழுதடைந்த படித்துறை சீரமைக்க கோரிக்கை


கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கோம்பூரில் பழுதடைந்த படித்துறை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2021 5:51 PM GMT (Updated: 23 Jun 2021 5:51 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கோம்பூரில் பழுதடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி கோம்பூரில் பிடாரி குளம் உள்ளது. இந்த குளத்தை வேளுக்குடி, கோம்பூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்புற மக்கள் மற்றும் பிடாரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தினை பெரும்பாலும் அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் ஆடைகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குளத்தை சுற்றி 3 படித்துறைகள் கட்டப்பட்டதாகவும், தற்போது ஒரு படித்துறை மட்டுமே இருப்பதாகவும், இருக்கும் ஒரு படித்துறையும் தடுப்பு தூண்கள் மற்றும் படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில் இடிந்து விழுந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

புதிய படித்துறை

மேலும், படித்துறையின் 2 பக்கமும் உள்ள தடுப்பு தூண்கள் குடைந்து எடுத்த குகை போல் காட்சி அளிக்கிறது. படித்துறை பழுதடைந்த நிலையில் இருந்த போதும் அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகிறார்கள். எனவே, பழுதடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் அல்லது அதே இடத்தில் புதிதாக படித்துறை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story