சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது-கலெக்டர் உத்தரவு


சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது-கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2021 8:52 PM GMT (Updated: 23 Jun 2021 8:59 PM GMT)

கெடமலையை சேர்ந்த சாராய வியாபாரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பட்டி பகுதியில் கடந்த 2-ந் தேதி சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் மதுவிலக்கு போலீசார் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கெடமலை பகுதியை சேர்ந்த காளி என்கிற சீரான் (வயது 40), சுப்பிரமணி (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 லிட்டர் சாராயம் மற்றும் 800 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் அழித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் காளி என்கிற சீரான் மீது ஏற்கனவே கடந்த மாதம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் சாராய வியாபாரி சீரானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சீரானிடம் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story