நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் நேரில் மனு தலைமைச் செயலகத்தில் பரபரப்பு


நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் நேரில் மனு தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:49 AM GMT (Updated: 29 Jun 2021 11:49 AM GMT)

நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் நேரில் மனு தலைமைச் செயலகத்தில் பரபரப்பு.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே அரசுப் பணியாளர்கள் பணியாற்றுவதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கொரோனா தொற்று தீவிரமாக உள்ள போதெல்லாம் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அலுவலகங்கள் இயங்கின.

அங்குள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் நேரில் வந்து மனு அளிக்கும் நிகழ்வு முற்றிலும் பாதிக்கப்பட்டது. அங்கு சில மாதங்களாக ஒரு சில அலுவலர்களே பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். கடந்த 4 மாதங்களாக, இந்தப் பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு, அவர்களிடம் மனுவை போலீசார் வாங்கி, முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இருக்கும் அலுவலரிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளிக்க பொதுமக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. எனவே பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு நேரில் வந்து மனு அளித்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே போலீசார் அவர்களை வரிசையில் நிற்கும்படி ஒழுங்குபடுத்தினர்.

Next Story