சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை


சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை
x
தினத்தந்தி 30 Jun 2021 12:00 PM GMT (Updated: 30 Jun 2021 12:00 PM GMT)

சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுகின்றன.

இதுகுறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டனர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செயல்பட்ட சட்டவிரோத குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்பின்னர், மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சட்டவிரோத குவாரிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டு விட்டதாக கூறினார்.

இவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோத குவாரிகள் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கவும், திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும். குவாரி மாபியாக்களை கட்டுப்படுத்தவும் குழுக்களை தமிழக அரசு அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

மேலும், 4 வாரங்களில் இது சம்பந்தமாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story