இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 July 2021 8:17 PM GMT (Updated: 1 July 2021 8:17 PM GMT)

ஒரத்தநாடு அருகே தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது38).வக்கீல். இவருக்கும், அம்மாப்பேட்டை தாலுகா உக்கடை பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகள் ஜெயலெட்சுமி (31) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ஜெயலெட்சுமி விரக்தியில் இருந்து வந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று காலை ஜெயலெட்சுமி வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். 
வழக்குப்பதிவு 
இதுகுறித்து ஜெயலட்சுமியின் தாயார் மயிலம்பாள் (60) கொடுத்த புகாரின் பேரில்  ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இறந்துபோன ஜெயலெட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இந்த தகவலை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணிக்கு போலீசார் தெரிவித்தனர். 
வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி விசாரணை மேற்கொண்ட பிறகே ஜெயலட்சுமியின் உடலை பிேரத பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்பதால், அவரது வருகைக்காக போலீசார் மற்றும் ஜெயலெட்சுமியின் உறவினர்கள் காத்திருந்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்
பணி நிமித்தம் காரணமாக வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி ஒரத்தநாடு மருத்துவமனைக்கு நேரில் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெயலெட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து விரைவாக உடலை ஒப்படைக்கக்கோரி ஒரத்தநாடு மருத்துவமனைக்கு எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து ஜெயலெட்சுமியின் உடலை பார்வையிட்டு அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து ஜெயலெட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story