மீன் வளர்ப்பு தொழிலுக்கு மானிய உதவி -கலெக்டர் தகவல்


மீன் வளர்ப்பு தொழிலுக்கு மானிய உதவி -கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2021 6:17 PM GMT (Updated: 2 July 2021 6:17 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு தொழிலுக்கு மானிய உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள்,கூட்டுபொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.  இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழிலுக்கான முதலீட்டிற்கு மானியம் வழங்கப்படும். அதில் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
இதே போல் ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.அதாவது பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடியே 25 லட்சமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு ரூ.1 கோடியே 30 லட்சமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை பெருமாள் கோவில்தெருவில் உள்ள மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந்தேதியாகும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story