விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களில் குவியும் மாணவர்கள்


விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களில் குவியும் மாணவர்கள்
x
தினத்தந்தி 2 July 2021 8:13 PM GMT (Updated: 2 July 2021 8:13 PM GMT)

ஆன்லைனில் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள் விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

நாகர்கோவில்:
ஆன்லைனில் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள் விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆன்லைன் தேர்வு
கொரோனா பரவல் காரணமாக என்ஜினீயரிங், கலைக்கல்லூரி மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அன்றைய நாட்களில் இணையதளம் மூலம் அனுப்புவதோடு, விரைவுத் தபால் மூலமும் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, தபால் நிலையங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை குமரி மாவட்ட கல்லூரிகள் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்து வருகிறார்கள். 
தலைைம தபால் நிலையம்
மாவட்டத்தின் பல்வேறு தபால் நிலையங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டாலும், நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்காக 3 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு விரைவு தபால்கள் பெறப்படுகின்றன. மற்ற தபால் நிலையங்களில் காலை 8 அல்லது 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே விரைவுத் தபால்கள் பெறப்படும். ஆனால் தலைமை தபால் நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெறப்படுகிறது. இதனால் இங்கு மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் தபால் நிலையத்துக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.
ரெயில் நிலையத்தில்...
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் செயல்படும் ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தினமும் மாலை 6.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை விரைவு தபால் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே அங்கும் மாணவர்கள் விடைத்தாள்களை அனுப்பலாம் என தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story