அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கம் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்


அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கம் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 July 2021 8:44 PM GMT (Updated: 2 July 2021 8:44 PM GMT)

அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பெங்களூரு:
  
சிறப்பான வளர்ச்சி

  கர்நாடக அரசின் தகவல்-உயிரி தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் உயிரி தொழில்நுட்ப உற்பத்தி துறையில் உள்ள அதிபர்களுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

  அறிவியல், வியாபாரம், தொழில்முனைவு, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிரதமர் மோடி அரசு செயலாற்றி வருகிறது. எந்த ஒரு அறிவியல்பூர்வமான சாதனைக்கு உயிர் அறிவியலே காரணம். இதற்கு கர்நாடக அரசின் உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையின் சிறப்பான வளர்ச்சியே சான்று. நாட்டுக்கே முன்மாதிரி என்று சொல்லக்கூடிய வகையில் கர்நாடகத்தின் வளர்ச்சி உள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதே...

  பல்வேறு துறைகள் இடையே நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ஒரு பாலமாக மத்திய அரசு செயல்படுகிறது. எத்தகைய ஆலோசனைகளையும் மத்திய அரசு திறந்த மனதுடன் ஏற்க தயாராக உள்ளது. அறிவியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதே மத்திய அரசின் இறுதி நோக்கம்.
  இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

  இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேசுகையில், "கர்நாடகம் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக மட்டுமின்றி உயிரி தொழில்நுட்பத்தின் தலமாகவும் திகழ்கிறது. உயிரி பூங்காக்கள், உயிரி மருந்து உற்பத்தி, உயிரி ஆராய்ச்சிகளில் பெங்களூரு ஒரு சிறந்த மையமாக இருக்கிறது. அறிவியல், உயிரி தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குவதுடன் உற்பத்தி, வளத்தையும் அதிகரிக்கிறது. சுத்தமான மின்சாரம், தூய்மையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதில் உயிரி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது" என்றார்.

Next Story