ஆரணி அருகே பட்டப்பகலில் கொத்தனார் வீட்டில் 11 பவுன் நகைகள்-பணம் கொள்ளை


ஆரணி அருகே பட்டப்பகலில் கொத்தனார் வீட்டில் 11 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 3 July 2021 4:16 AM GMT (Updated: 3 July 2021 4:16 AM GMT)

ஆரணி அருகே பட்டப்பகலில் கொத்தனார் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள போந்தவாக்கம் கண்டிகை, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமணன் (வயது 39). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அங்கம்மாள் (28), மகன் ஜானகிராமன் (12), மகள் பிரியதர்ஷினி (10) ஆகியோர் ஆவர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ஜானகிராமன் மற்றும் அவரது தங்கை பிரியதர்ஷினி ஆகியோர் மட்டும் இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டில் இருந்த சிறுவர்களிடம் பீரோவில் வைத்திருக்கும் ரூ.50 ஆயிரத்தை லட்சுமணன் வாங்கி வரச்சொன்னதாக கூறினர். மேலும் அவர்களிடம் செல்போனில் அவர்களது தந்தை லட்சுமணன் பேசுவது போல் ஒருவர் பேசியுள்ளார்.

அதை நம்பி பணத்தை எடுத்து கொடுப்பதற்காக சாவியை எடுத்து பீரோவை திறக்க முயன்ற சிறுவர்களிடமிருந்து சாவியை பறித்து பீரோவில் இருந்த பணத்தையும், மோதிரம், செயின், கம்மல், மாட்டில் உள்ளிட்ட 11 பவுன் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தாயிடம் நடந்தவற்றை சிறுவனும் அவனது தங்கையும் கூறியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லாரன்ஸ், ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story