50 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த காட்டுப்பன்றி


50 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த காட்டுப்பன்றி
x
தினத்தந்தி 3 July 2021 4:38 PM GMT (Updated: 3 July 2021 4:38 PM GMT)

கொடைக்கானல் அருகே 50 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த காட்டுப்பன்றியின் கால் துண்டானது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியில், காட்டுப்பன்றி ஒன்று வழிதவறி நேற்று மாலை வந்து விட்டது. அந்த காட்டுப்பன்றி, 50 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதனால் அதன் முன்னங்கால் ஒன்று உடைந்து துண்டானது. இதனால் ரத்தம் பீறிட்டது. பின்னர் அந்த காட்டுப்பன்றி, அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் சத்தம் போட்டது.

 இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கயிறு கட்டி காட்டுப்பன்றியை மீட்டு, வாகனம் மூலம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். 

அங்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் காட்டுப்பன்றிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து காட்டுப்பன்றி குணம் அடைந்த பிறகு மீண்டும் வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story