300 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்


300 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 3 July 2021 5:08 PM GMT (Updated: 3 July 2021 5:08 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
கொரோனா 2-வது அலை
கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று தணிந்து வருகிறது. அடுத்து 3-வது அலையின் அச்சுறுத்தல் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கருதுகிறார்கள். கொரோனா அலையின் அடுத்தடுத்த தாக்குதலில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். 
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகளின் கையிருப்புக்கு ஏற்ற வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
300 ேபருக்கு மட்டுமே தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியபோது மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாத நிலை இருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். 
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால், நாடார் தெரு, அபிஷேக கட்டளை தெரு, அரியலூர், தோப்புத்தெரு, நாகை ரோடு, தைக்கால் தெரு, நாகை சாலையில் உள்ள வசந்த மஹால் அரங்கு ஆகிய இடங்களில் நேற்று தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். ஆனால் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. 
போதிய அளவில் வழங்க வேண்டும்
இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஆர்வத்தோடு வந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  போதிய அளவில் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story