கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ


கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ
x
தினத்தந்தி 3 July 2021 5:51 PM GMT (Updated: 3 July 2021 5:51 PM GMT)

கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கிணத்துக்கடவு

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென தென்னை நாரில் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ தென்னை நார் உற்பத்தி எந்திரம் உள்பட அருகில் உள்ள தென்னை நார்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story