வெவ்வேறு பிரச்சினையில் 2 பெண்கள் தற்கொலை


வெவ்வேறு பிரச்சினையில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 6:16 PM GMT (Updated: 3 July 2021 6:16 PM GMT)

தோகைமலை, கரூர் பகுதியில் வெவ்வேறு பிரச்சினையில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

தோகைமலை
குடும்பப்பிரச்சினை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் ஊராட்சி செம்பாறைகல்லுப்பட்டி களத்து வீடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 29). இந்தநிலையில் சத்யாவிற்கும், வடிவேலின் தாயார் வெள்ளைம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் மீண்டும் சத்யாவிற்கும்,  வெள்ளையம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வடிவேல் ஈரோட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்து தாய் மற்றும் மனைவியை சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது மீண்டும் சத்யா, வெள்ளையம்மாளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், தனது தாயார் வெள்ளையம்மாளை கீழே தள்ளியதால் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து வெள்ளையம்மாள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
பெண் தற்கொலை
இந்நிலையில் குடும்ப தகராறால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா கடந்த 29-ந்தேதி அரளி விதையை அறைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை வடிவேல் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சத்யா பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்
இதேபோல் கரூர் வடிவேல் நகர் பகுதிக்குட்பட்ட இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பழனியம்மாள் (52). இவர் கடந்த 2½ ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனியம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story