கரூர், நொய்யல் பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


கரூர், நொய்யல் பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 July 2021 6:28 PM GMT (Updated: 3 July 2021 6:28 PM GMT)

கரூர், நொய்யல் பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்
வாலிபர் பலி
கரூர் அருகே உள்ள வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரிபிரசாத் தனது சைக்கிளில் சுக்காலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஹரிபிரசாத் மீது மோதியது. 
இதில் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ஹரிபிரசாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சுப்பிரமணி (44) மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து 
இதேபோல் நொய்யல் அருகே உள்ள நடையனூர் இளங்கோநகரை சேர்ந்தவர் முத்துசாமி (58). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் அரங்கசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் உதவிசமையலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முத்துசாமி பரமத்திவேலூர்-கொடுமுடி நெடுஞ்சாலையில் நடையனூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று முத்துசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துசாமியின் அண்ணன் ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story