அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி மும்முரம்


அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 3 July 2021 6:43 PM GMT (Updated: 3 July 2021 6:43 PM GMT)

நீலகிரியில் நாளை முதல் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

ஊட்டி

நீலகிரியில் நாளை முதல் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கிருமி நாசினி தெளித்து...

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 போக்குவரத்து பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் மீண்டும் பொதுப்போக்குவரத்து தொடங்க உள்ளதால் பஸ்களை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஊட்டி போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்களை சரிபார்த்து, இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பஸ்களின் உள்புறம், வெளிப்புறம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 

250 பஸ்கள்

இதுகுறித்து நீலகிரி போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஆறுமுகம் கூறியதாவது:- நீலகிரியில் 80 சதவீதம்(அதாவது 250) அரசு பஸ்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. துறையூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், சேலம், ஈரோடு, கோவை போன்ற வெளியிடங்களுக்கு இயக்கப்பட உள்ளது. இரவு நேர போக்குவரத்து இல்லை. 

அரசு அறிவிப்பின்படி 50 சதவீத இருக்கைகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிக்க அனுமதிக்கப்படும். பெரிய பஸ்களில் 32 பேர், சிறிய பஸ்களில் 26 பேர் அனுமதிக்கப்படுவார்கள். டிரைவர்கள், கண்டக்டர்கள் 98 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மாநிலங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

அருங்காட்சியகம்

பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. புதிய தளர்வில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் நாளை (திங்கட்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உள்ளது. 
இதனால் அருங்காட்சியகம் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.


Next Story