திண்டுக்கல், பழனி, வடமதுரை பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது


திண்டுக்கல், பழனி, வடமதுரை பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 7:05 PM GMT (Updated: 3 July 2021 7:05 PM GMT)

திண்டுக்கல், பழனி, வடமதுரை பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:
பழனி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் நேற்று பழனி ஆர்.எப்.சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெரியார் சிலை அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பெருமாள்புதூரை சேர்ந்த ஐந்துமாவடியான் (வயது 50) என்பதும், பழனி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 482 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதேபோல் கொடைக்கானல் சாலை-பைபாஸ் பிரிவு பகுதியில் மது விற்றதாக பழனி பாரதிநகரை சேர்ந்த அங்குசாமி (52), பெரியகடைவீதியை சேர்ந்த காளிமுத்து (40) ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 533 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
வடமதுரை அருகே அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் மதுவிற்ற குளத்துபட்டிைய சேர்ந்த சுப்பிரமணி (40) என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (43) என்பவரை சாணார்பட்டி போலீசாரும், குட்டியபட்டி, கொட்டபட்டி ஆகிய பகுதிகளில் மதுவிற்ற நெல்லூரை சேர்ந்த சிவன்காசு (62), அதிகாரிபட்டியை சேர்ந்த விஜய் (30), ராமையன்பட்டியை சேர்ந்த சந்தனம் (55) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசாரும் கைது செய்தனர். 
திண்டுக்கல் நல்லாம்பட்டி பிரிவில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி மது விற்ற நத்தம் நடுவனூரை சேர்ந்த ஜெயபாண்டியை (29) போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருந்து 1,464 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதேபோல் திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சேசுராஜ் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 771 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story