நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி: 65 சதவீத பஸ்கள் இயக்க நடவடிக்கை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி: 65 சதவீத பஸ்கள் இயக்க நடவடிக்கை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 July 2021 7:56 PM GMT (Updated: 3 July 2021 7:56 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், 65 சதவீத ஆரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம்
நாளை முதல் பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் நேற்று முன்தினம் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்திலும் நாளை காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சேலம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பஸ்களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பஸ்களில் பேட்டரிகள் மாற்றுவது, டயர்கள் மாற்றுவது, பிரேக் சரியாக பிடிக்கிறதா? என்பன உள்ளிட்ட பணிகளும் நடந்தன.
65 சதவீத பஸ்கள்
இதேபோல் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல் 2 நாட்கள் 65 சதவீத பஸ்களை மட்டுமே இயக்க முடிவு செய்துள்ளோம். பின்னர் பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.
பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும். இதுதவிர பணிமனைகளில் இருந்து வெளியே செல்லும் மற்றும் உள்ளே வரும் பஸ்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றனர்.


Next Story